16
மக்களுக்காக வாழ்ந்தவர்களின் மரணம்
இமயமலையைவிடக் கனமானது.
பிற்போக்காளர்களின் மரணமோ,
இறகைவிட லேசானது.
மக்கள் சீனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் மாசே துங் (Mao Tse-tung) ஆவார்.இவர் சீனாவில் ஹூனான் மகாணத்தில் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று பிறந்தார்.ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு அதிகாலையிலும்,இரவிலும் விவசாய வேலையில் ஈடுபட்டார்.படிப்பை முடித்ததும் பள்ளிக்கூட ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார்.பீகிங் பல்கலைக்கழக நூலகத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தபோது கம்யூனிஸக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். சீனப் பொதுவுடமைக் கட்சியை தோற்றுவித்த 12 தலைவர்களில் ஒருவராக மாசே துங் இருந்தார்.1935 ஆம் ஆண்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
சீனாவில் நடந்த கம்யூனிசப் புரட்சியையும் , அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார்.மாசே துங் தன் புரட்சி படையினருடன் நீண்ட நடைப்பயணத்தை (Long March) மேற்கொண்டார். இப்படையில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.அவர் பயணம் செய்த தூரம் 8 ஆயிரம் மைல்கள்.இந்த மகத்தான சாதனையால் மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று சீன மக்கள் குடியரசை நிறுவினார்.சீன வரலாற்றையே மாற்றி அமைத்ததால் இவரை நவ சீனத்தின் சிற்பி என்று அழைத்தனர்.இவர் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று இயற்கை எய்தினார்.