21
நாம் காலனிய ஆட்சியில் இருந்துதான் சுதந்திரம்
அடைந்து விட்டோம்.ஆனால் சமூகரீதியாகவோ,
பொருளாதாரரீதியாகவோ நாம் இன்னும்
சுதந்திரம் அடையவில்லை.
சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராடிய வீராங்கனை லட்சுமி சேகல்(Lakshmi Sahgal) ஆவார். இவர் சென்னை மாகாணத்தில் 1914 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று பிறந்தார். இவரின் தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.இவர் சென்னையில் மருத்துவம் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது பகத்சிங்கின் வழக்கிற்காக நிதி திரட்டினார். சிங்கப்பூரில் ஏழைப் பெண்களுக்கு மருத்துவ சேவை புரிந்தார்.அங்கு நேதாஜியை சந்தித்த பின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.1943 ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப் படையின் தலைவராக லட்சுமி செயல்பட்டார். இப்படையில் 1500 பெண்கள் இருந்தனர். இப்படையே ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகும்.
கேப்டன் லட்சுமியின் தலைமையில் பர்மாவிலிருந்து பெண்கள் படை டில்லியை நோக்கி புறப்பட்டது.பர்மாவின் எல்லையில் போர் மூண்டது.விமான குண்டு வீச்சிலிருந்து உயிர் தப்பினார்.கைது செய்யப்பட்ட கேப்டன் லட்சுமி அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓராண்டு காலம் சிறை வைக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாக 1971 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.இவர் 2012 ஆம் ஆண்டு ஜூலை 23 இல் இயற்கை எய்தினார்.